அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Wednesday, April 21, 2010

முஸ்லிம்களுக்கு உடனே இடஒதுக்கீடு வழங்கக்கோரி புதுச்சேரியில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்காமல் காலதாமதப்படுத்தும் புதுச்சேரி மாநில அரசைக் கண்டித்து புதுவை மாநில மனிதநேய மக்கள் கட்சி சார்பாக இன்று புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் சுதேசி மில் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ம.ம.க. புதுச்சேரி மாவட்டச் செயலாளர் அஷ்ரப் தலைமை தாங்கினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய ம.ம.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், “புதுச்சேரியில் முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு அளிக்காமல் வைத்தியலிங்கம் அரசு தேவையில்லாமல் காலம் தாழ்த்தி வருகிறது. புதுவை முதல்வர் வைத்தியலிங்கம் தனது சொந்த ஊரான நெட்டப்பாக்கத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இன்றுவரை பாங்கு ஒலி எழுப்ப தடை இருப்பதற்கு காரணமாக இருக்கின்றார். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே மோதலை உருவாக்குவதற்காக முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இருந்து 1.5 விழுக்காடும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 1 விழுக்காடும் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அறிவித்தார். இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று மட்டுமின்றி சட்டசிக்கலும் நிறைந்ததாகும். ஆனால் முஸ்லிம்களும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து வைத்தியலிங்கத்தின் சதியை முறியடித்தோம். தொடர்ந்து புதுவையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி பல்வேறு வகையில் போராட்டம் நடத்திவிட்டோம். இனியும் நாம் காத்திருக்க முடியாது. தற்போது நடைபெற்று வரும் புதுவை சட்டமன்றத் தொடரில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை வெளியிட வேண்டும். இல்லையெனில் புதுவை மாநில முதல்வர் வைத்தியலிங்கத்தின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இதன் பின்பும் இடஒதுக்கீடு வழங்காவிட்டால் தமிழகத்திற்குள் அவரை நுழைய விடாமல் தடுக்கும் போராட்டத்தை நடத்துவோம். இதேபோல் மறைமுகமாக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் இல்லத்தையும் முற்றுகையிடுவோம்” என உரையாற்றினார். மேலும் ‘மீனவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க கோரியும் ம.ம.க. போராட்டம் நடத்தும்’ என்றும் அவர் அறிவித்தார்.



கண்டன ஆர்ப்பாட்டத்தில மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது, தமுமுக துணைச் செயலாளர் எஸ்.எம்.ஏ. ஜின்னா, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் புதுவை சுகுமாரன், கிராம பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் ஜெகன்நாதன் சிங்காரவேலர் முன்னேற்ற கழக செயலாளர் செ. சந்திரன், சிந்தனை சிற்பி சமூக சேவை சங்கத்தின் செயலாளர் இரா. குமரன், சலவைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் முத்து, மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர் இரா. அவிமன்னன், புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பின் அமைப்பாளர் சி.சூ. சாமிநாதன், சமூக ஆர்வலர் ச. மூர்த்தி, பெரியார் தி.க. இளைஞரணி செயலாளர் செ. சுரேஷ், ஒட்டர் நலச் சங்கத்தின் செயலாளர் முருகன் ஆகியோரும் கண்டன உரை ஆற்றினார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டனர்.


மேலும் படிக்க தினமலர்
http://www.dinamalar.com/pondynews_detail.asp?news_id=12692

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP