ஏனாம் தொழிற்சங்க தலைவரை கொன்ற காவல்துறையை கண்டித்து காரைக்காலில் இன்று அனைத்து கட்சியினர் கடையடைப்பு
காரைக்கால், பிப்.2 புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட ஏனாம் தொழிலாளி பிரச்சனையில் தொழிற்சங்க தலைவரை கொன்ற காவல்துறையை கண்டித்தும், தொழிலாளி கொலை குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரியும், காரைக்காலில் அனைத்து கட்சியினர் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட ஏனாம் தொகுதியில், கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெற்ற தொழிலாளி பிரச்சனையில், தொழிற்சங்க தலைவரை கொன்ற காவல்துறையை கண்டித்தும், தொழிலாளி கொலை குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரியும், தொழிற்சங்க தலைவர் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈட்டை வழங்க வலியுறுத்தியும், பிரச்சனையின் போது தேவையற்ற துப்பாக்கி சூடு நடத்தியதில் காயம் அடைந்த தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈட்டை வழங்க வலியுறுத்தியும், காரைக்காலில் இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை, மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், பார்வர்டு பிளாக் ஆகிய கட்சியினர் இன்று ஒரு நாள் பந்த் நடத்தினர்.
இந்த பந்த்தில் தி.மு.க, காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. மேலும், பந்த்தில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடைசி நேரத்தில் கலந்துகொள்ளவில்லை.
பந்தை முன்னிட்டு, காரைக்கால் மாதாகோவில் வீதி, பாரதியார் வீதி, திருநள்ளாறு ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஒரு சில கடைகளை தவிர பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தது. இருந்தாலும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கியது. பஸ், ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஓடியது. தொடர்ந்து, புதிய பேருந்து நிலையம் எதிரில், போராட்டக்காரர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
