காவல் துறையைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்
காரைக்கால், அக். 28: காரைக்காலில் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை கடுமையாகத் தாக்கியதாக போலீஸôரைக் கண்டித்து, காரைக்காலில் புதன்கிழமை ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் மாவட்டம், வாஞ்சூரில் செயல்பட்டு வரும் கப்பல் துறைமுகத்தில் துணைப் பொது மேலாளராகப் பணியாற்றியவர் சென்னையை சேர்ந்த சரவணன். இவர் காரைக்காலில் தனியார் ஹோட்டலில் தங்கி துறைமுகத்துக்கு பணிக்கு சென்று வந்தார்.
இவர் கடந்த 16.8.2009 அன்று பூவம் பகுதி வயல் ஓரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கோட்டுச்சேரி போலீஸôர் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இறந்து போன சரவணன் அடிக்கடி ஆட்டோவில் சென்று வந்ததை அறிந்த போலீஸôர், அவர் அடிக்கடி சவாரி செய்த ஆட்டோக்களின் ஓட்டுநர்களை அழைத்து விசாரித்தனர்.
மேலும், இதுதொடர்பாக காரைக்காலைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் கண்ணன், ஜாகீர் உசேன் ஆகியோரை கடந்த 26-ம் தேதி மாலை அழைத்துச் சென்று போலீஸôர் விசாரித்தனர். இவர்களில் ஜாகீர் உசேனை செவ்வாய்க்கிழமை மாலை வாகனத்தில் அழைத்து வந்து காரைக்கால் பேருந்து நிலையம் அருகே போலீஸôர் விட்டுவிட்டுச் சென்று விட்டனராம்.
அப்போது தனது நண்பர்களிடம், போலீஸôர் தன்னைக் கடுமையாகத் தாக்கியதாக ஜாகீர் உசேன் கூறினாராம். இதையடுத்து, அவரது நண்பர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.
மேலும், விசாரணை என்ற பெயரில் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாகக் கூறி, இச் செயலைக் கண்டித்து தமுமுகவினர் செவ்வாய்க்கிழமை இரவு காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாகீர் உசேனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஐ.ஆர்.சி.மோகன் புதன்கிழமை நேரில் சென்று விசாரித்தார்.
இதற்கிடையே, விசாரணை என்ற பெயரில் ஆட்டோ ஓட்டுநர்களை மட்டும் அழைத்துச் சென்று அடித்து உதைப்பதாகவும், இச்செயலில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் காரைக்காலில் ஆட்டோ ஓட்டுநர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, காவல் துறையினரைக் கண்டித்து, பேரணி நடத்தி காவல் உயரதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
காரைக்கால் நகரில் ஆட்டோக்கள் ஓடாததால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் அவதிக்குள்ளாயினர்.