ஆடிட்டர் ரமேஷ் படுகொலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்
மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் M.நெய்னா முஹம்மது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
சேலத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப் பட்டது வன்மையாக கண்டனத்திற்குரியது. மனிதநேயமற்ற இந்த செயல் எந்த வகையிலும் சகித்துக்கொள்ள முடியாதது.
தமிழகத்தில் இதுபோன்ற படுகொலைகள் தொடர்ந்து நடப்பதும், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான காலதாமதமும் இதுபோன்ற கொடிய குற்றவாளி களுக்கு மேலும் துணிச்சலை உருவாக்கி விட்டதோ என்ற அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
சமீபகாலமாக நடக்கும் பல படுகொலைகளில் சங்பரிவார் பிரமுகர்கள் இலக்காகி வரும் நிலையில், அதனை வைத்து மதவாதப் பிரச்சனையாக்க விஷமிகள் சிலர் திட்டமிட்டு பரப்புரை செய்கின்றனர். இதுதொடர்பான விசாரணைகளில் அப்பாவி முஸ்லிம் வாலிபர்களைத் துன்புறுத்துவதும், உண்மைக் குற்றவாளிகள் முஸ்லிம் அல்லாதோர் என கண்டுபிடிக்கப் பட்டாலும் அதனை பகிரங்கப்படுத்தாத காவல்துறையின் செயலும் உள்ளபடியே வேதனையை தருகிறது.
தமிழக அரசு இவ்விஷயத்தில் துரித நடவடிக்கை எடுத்து, உண்மைக் குற்றவாளி களைக் கண்டுபிடிக்க வேண்டும். அதனை நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
சொந்த, தனிப்பட்ட பிரச்சனைகளால் நடைபெறும் கொலைகளுக்கு மதச்சாயம் பூசுவது நேர்மையற்ற செயலாகும். இதுதொடர்பான விசாரணைகளில் அப்பாவி முஸ்லிம் வாலிபர் களைக் குறிவைப்பதும் வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியது.
எனவே இதுவரை நடந்த படுகொலைகளில் உண்மைக் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கவும் அப்பாவிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உண்மைக் குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது; அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது.
நாளை பாஜக அறிவித்துள்ள கதவடைப்பின் போது பொதுமக்களுக்கும் பொதுச் சொத்துகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க புதுச்சேரி காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.