இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை கண்டித்து கடையடைப்பு மற்றும் ரயில் மறியல் - காரைக்காலில் நடைபெற்றது
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால் இனப்படுகொலை நடத்திய அந்நாட்டு அரசுக்கும் அதன் அதிபர் ராஜபக்சேவுக்கும் சர்வதேச அளவில் அங்கீகாரம் வழங்கியது போலாகும் என்பதால் அதுபோன்ற ஒரு தீய நிகழ்வு நடைபெறக்கூடாது என மனிதநேய மக்கள் கட்சியும் அதன் தோழமை அமைப்புகளும் தொடர்ந்து களமாடி வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவின் சார்பில் பிரதமர் கலந்துகொள்ளவில்லை என்றும் இந்தியாவின் சார்பில் மத்திய அமைச்சர் கலந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டதை ஏற்றுகொள்ள முடியாது. இனபடுகொலையாளர்கள் அம்பலப்படுத்தபட வேண்டும். இந்தியாவின் தரப்பிலிருந்து ஒருவர்கூட பங்கேற்கக்கூடாது என்ற கருத்தில் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழ் மக்கள் நலன் பேணும் அனைத்து அமைப்புகளும் உறுதியாக உள்ளன.
இலங்கையில் இனவெறி படுகொலைகளை நடத்திய ராஜபக்செயின் தலைமையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டைக் கண்டித்தும், அதில் இந்தியாவின் பிரதிநிதியாக எவரும் கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும் காரைக்காலில் முழுஅடைப்பும் மற்றும் ரயில் மறியல் போராட்டமும் இன்று நடைபெற்றது. ரயில் மறியல் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட துணை செயலாளர் அப்துல் நாசர் தலைமையில் ம ம க தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன், நகர தலைவர் ஜெகபர் சாதிக் உட்பட எராளமான மனிதநேய மக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர். மேலும், மதிமுக, CPI, விடுதலை சிறுத்தைகள், SDPI, நாம் தமிழர் கட்சி, திராவிடர் கழகம், சமத்துவ மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், ஊழல் எதிர்ப்பு இயக்கம், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் போன்ற பல்வேறு கட்சி மற்றும் இயக்கத்தினரும் கலந்து கொண்டனர். ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்


