நவம்பர் 29: காரைக்கலில் - விவசாயிகளின் முழு அடைப்பிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!
நவம்பர் 29: காரைக்கலில் - விவசாயிகளின் முழு அடைப்பிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!
மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் எம். நைனா முஹம்மது வெளியிடும் அறிக்கை:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு, ராசிமணல் ஆகிய இரண்டு அணைகளைக் கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இதனால் தமிழகம் மற்றும் காரைக்காலுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான காவிரி நீர் தடுத்து நிறுத்தப்படும் அபாயம் உருவாகி இருக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்கள் இதனால் பாலைவனமாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி சென்னை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமும் பாதிப்புக்குள்ளாகும். நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 கோடி தமிழக மக்களின் இயற்கை உரிமை பறிக்கப்படும் நிலை தடுக்கப்பட வேண்டியது அவசர அவசியமாகும்.
இவ்விஷயத்தில் நடுவன் அரசு உடனடியாகத் தலையிட்டு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு ஆகியவற்றை உடனே அமைத்திட வலியுறுத்தி விவசாய சங்கங்கள் எதிர்வரும் 29.11.2014 அன்று காரைக்கால் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தவிருக்கின்றன. அப்போராட்டக் குழுவின் வேண்டுகோளை ஏற்று மனிதநேய மக்கள் கட்சி முழு ஆதரவை வழங்குகிறது.
அன்றைய தினம் வணிகர்கள் வணிக நிறுவனங்களை அடைத்தும், விவசாயிகள் வேலைகளைப் புறக்கணித்தும், தனியார் நிறுவனங்கள் தங்கள் பணிகளை நிறுத்தியும், வாகன உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் தங்கள் வாகனங்களை இயக்காமலும் இப்போராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இவண்
எம். நைனா முஹம்மது
மாவட்ட செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி