காரைக்காலில், ஆதார் அடையாள அட்டை போட்டோ எடுக்க கூடுதல் பொது சேவை மையங்களை நியமிக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் - மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை
மனிதநேய மக்கள் கட்சி காரைக்கால் மாவட்ட செயலாளர் எம்.நைனா முஹம்மது அவர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டையில் ஆதார் எண்ணை இணைத்தல் உட்பட அரசின் அனைத்து பணிகளுக்கும் ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என மத்திய அரசும், புதுச்சேரி அரசும் அறிவுறுத்தி வரும் நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் தென்னங்குடி மற்றும் அம்மால்சத்திரம் ஆகிய இரண்டு பொது சேவை மையங்கள் (Common Service Center) மட்டும் ஆதார் அடையாள அட்டை போட்டோ எடுக்காதவர்கள் பதிவு செய்து புதிய ஆதார் அட்டை எடுக்க நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பெயர் பதிவு செய்து போட்டோ எடுக்காதவர்களும், 5 வயதுக்கு மேற்பட்டவர்களும், ஆதார் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்ததால் இதுவரை போட்டோ எடுக்காதவர்களும், தற்பொழுது அரசின் கட்டாய அறிவிப்பால் இந்த இரண்டு பொது சேவை மையத்திலும் தினமும் நூற்றுக்கணக்கானோர் ஆதார் அடையாள அட்டை போட்டோ எடுக்க வருவதால் கூட்டம் அதிகமாகி மக்கள் பல மணிநேரம் வரிசையில் கால்கடுக்க காத்து கிடக்கின்றனர். மேலும், ஆதார் போட்டோ எடுக்க பதிவு செய்து பொது சேவை மையத்தால் ஒரு மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டு, ஒரு மாதங்களுக்கு பிறகே போட்டோ எடுக்கப்படுகிறது. இதனிடையே, தமிழகத்தில் இருந்தும் ஆதார் எடுக்க பலர் இங்கு வருகின்றனர். இதனால், வேலைக்கு செல்பவர்களும், வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்களும் போட்டோ எடுப்பதற்கு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
ஆகவே, தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து காரைக்கால் நகர பகுதியில் ஆதார் அடையாள அட்டை போட்டோ எடுக்க மேலும் கூடுதலாக 2 பொது சேவை மையங்கள் நியமனம் செய்து காரைக்கால் மாவட்ட மக்களின் இன்னல்களை போக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம்.