காரைக்கால் மாவட்டத்தில் கால்நடைகளை திரியவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடன் அகற்றவும், அரசு துறைகளில் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுவதை தடுக்கவும், அரசு வாகனங்கள் முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கவும் வலியுறுத்தி
மாவட்ட ஆட்சியரிடம் மனிதநேய மக்கள் கட்சி மனு அளித்தது.
காரைக்கால் மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் கரிகாலன் அவர்களை மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் நெய்னா முஹம்மது தலைமையில், மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, மாவட்ட துணை செயலாளர் ஷாஜஹான், த.மு.மு.க மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன், நகர செயலாளர் சர்புதீன், நெடுங்காடு தொகுதி செயலாளர் ஹாஜா மைதீன், காரை வடக்கு தொகுதி செயலாளர் முஹம்மது இபுராஹீம், மாவட்ட மனித உரிமை மற்றும் சுற்றுப்புற சூழல் அணி செயலாளர் முஹம்மது ஜெக்கரியா, தமுமுக நகர பொருளாளர் கமால் ஹுசைன், எம்.ஜி.ஆர் நகர் கிளை செயலாளர் முஹம்மது யூசுப், முன்னால நகர செயலாளர் முஹம்மது சிக்கந்தர் ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது "சாலைகளில் திரியும் கால்நடைகளால் வாகனங்களில் செல்பவர்கள் ஏராளமானவர்கள் விபத்தில் பாதிக்கப்பட்டு அதில் பலர் உயிர்களை இழந்தும், பலர் கை கால்கள் ஊனமாகி பல லட்சக்கணக்கில் செலவு செய்து வீட்டிலேயே முடங்கி போய் உள்ளனர். இது சம்பந்தமாக பலமுறை புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. ஆகவே, தாங்கள் கடுமையான எடுத்து சாலைகளில் கால்நடைகளை திரியவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடன் அகற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள சூழ்நிலையில் புதுச்சேரி அரசும் நீர் நிலைகளை மீட்க முடிவு செய்து, ஏரி, குளம், வாய்க்கால் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆக்கிரமிப்புகள் குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளிடமிருந்து நேரடியாக புகார்களை பெற்று வருகின்றனர். அதுபோல், காரைக்கால் மாவட்டத்திலும் ஒரு முகாம் நடத்தி ஆக்கிரமிப்பு சம்பந்தமான புகார்களை பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளிடமிருந்து பெற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகிறது, குறிப்பாக பட்டா மாற்றம் போன்ற பணிகளுக்கு கையூட்டு பெறாமல் கோப்புகள் நகர்வதில்லை. ஆகவே, காரை பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் தலை விரித்தாடும் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாகவும், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூட நிதி பற்றாக்குறை என கூறி வரும் நிலையில். அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் தேவையற்ற செலவு செய்வதையும், அரசு வாகனம் அரசு அதிகாரிகளின் சொந்த வேலைகளுக்கு முறைகேடாக பயன்படுத்துவதையும் தடுக்கவும், அதிகாரிகளின் வீடுகளுக்கு வாகனங்கள் அழைக்க செல்லக்கூடாது என சட்டமிருந்தும் அதிகாரிகளின் வீடுகளுக்கு அவசர நேரங்களை தவிர்த்து அரசு வாகனங்கள் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.




